தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

நவாஸ் ஷெரீஃபின் ஜாமீன் மனு தள்ளுபடி: ஊழல் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் ஜாமீன் மனுவை அந்நாட்டு உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:18 am IST


ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் ஜாமீன் மனுவை அந்நாட்டு உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து கிசிச்சைக்காக ஜாமீனில் விடக்கோரி நவாஸ், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர் ஃபரூக் மற்றும் மோக்ஸின் அக்தர் கயானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், மருத்துவ காரணங்களை கூறி நவாஸை சிறையிலிருந்து விடுவிக்க முடியாது எனக்கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நவாஸின் ஜாமீன் மனு விசாரணையின்போது அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா  ஆஷிப் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
தீர்ப்பு குறித்து அப்பாஸி செய்தியாளர்களிடம் கூறுகையில்.  நவாஸ் ஷெரீஃப் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது பல்வேறு மருத்துவ குழுக்களால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நிச்சயம் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. இருப்பினும், இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலம் இப்பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண்போம் என்றார்.
நவாஸ் ஷெரீஃபின் ஜாமீன் மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தநிலையில், உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் குழுமியிருந்தனர். ஜாமீன்  மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அறிந்ததும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  
பின்னணி: அல்-அஜீஸா இரும்பாலை முறைகேடு வழக்கில் நவாஸுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி நீதிமன்றம்  7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர்  லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிறைச் சாலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழு  நவாஸ் ஷெரீஃப் இருதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இதையடுத்து, சிகிச்சைக்காக ஜாமீனில் விடக்கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நவாஸ் மனுத் தாக்கல் செய்தார். தற்போது, அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, நவாஸ் உடனடியாக சிறையிலிருந்து விடுதலையாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.