

அபு தாபி: இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்துமா என்பது குறித்த கேள்விக்கு அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் பதிலளித்துள்ளார்.
அணு ஆயுத பலம் கொண்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு தற்போது அபாய கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஒருவேளை பாகிஸ்தான் ஒரு அணு ஆயுதத்தை இந்தியா மீது வீசினால், அடுத்த நொடியே, இந்தியா 20 அணு ஆயுதங்களை பாகிஸ்தான் மீது வீசி நாட்டையே காலி செய்து விடும் என்று பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.
அபு தாபியில் செய்தியாளர்களிடம் பேசிய முஷாரஃப், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மீண்டும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இங்கே ஒருகாலும் அணு ஆயுதத் தாக்குதல் நடைபெறாது. ஒரு வேளை பாகிஸ்தான் ஒரே ஒரு அணு ஆயுதத்தை இந்தியா மீது வீசினால் கூட, அடுத்த நொடியே, 20 அணு ஆயுதங்களை வீசி இந்தியா பாகிஸ்தானையே காலி செய்து விடும். எனவே, அணு ஆயுதத்தை எடுப்பதாக இருந்தால் 50 அணு ஆயுதங்களை வீசி இந்தியாவை முற்றிலும் அழித்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் பாகிஸ்தான் மீது 20 அணு ஆயுதங்களை வீச மாட்டார்கள். எனவே, ஒரே நேரத்தில் 50 அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதா? என்று பர்வேஸ் முஷாரஃப் கேள்வி எழுப்பினார்.
புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.