லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கென்ய இளைஞர் ஒருவர் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவிற்குச் சொந்தமான கென்யா ஏர்வேஸ் நிறுவன விமானம் ஒன்று நைரோபி நகரத்திலிருந்து, லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தது. அந்த விமானமானது லண்டன் வான்பரப்பில் பயணம் செய்த போது, கிளாபம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக குறிப்பிட்ட தோட்டத்தின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
விசாரணை நடத்திய அதிகாரிகள் குறிப்பிட்ட விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒரு பை, தண்ணீர் மற்றும் உணவுப் பொட்டலத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அந்த இளைஞர் அங்கேயே ஒளிந்துகொண்டு பயணித்து நடுவானில் விமானத்திலிருந்து விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
அந்த கென்யா வாலிபரை குறித்து கண்டறிய உதவுமாறு கென்யா உயர் அதிகாரிகளிடம் லண்டன் காவல்துறையினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.