இஸ்லாமாபாத்: எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாக இந்தியத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரிக்கும் அறிவிப்பினை வெளியிட்டதில் இருந்து எல்லைப் பகுதியில், தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. ஆனால் அதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வருகிறது.
இந்நிலையில் எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாக இந்தியத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டித்துள்ளது.
நேசபிர் மற்றும் பாக்சர் செக்டார்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்தியா அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இந்திய ராணுவம் குறிவைத்து தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் மூலமாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்து விட்டதாகவும் மூன்று பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியாவை புதனன்று நேரில் அழைத்து பாகிஸ்தான் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.