பிரேசிலின் பந்தனால் ஈரநிலப் பகுதியில் இந்த ஆண்டு மட்டும் காட்டூத் தீ 4 மடங்காக உயர்ந்துள்ளது என அந்த நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பந்தனால் பகுதியில் அமைந்துள்ள தெற்கு அமேசான் மழைக்காட்டுப் பகுதியில் ஏற்படும் காட்டுத் தீ, இந்த ஆண்டில் நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.
அந்தப் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 4,515 காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டன. கடந்த 2018-ஆம் ஆண்டின் இதே கால அளவில் 1,039 காட்டுத் தீ சம்பவங்களே ஏற்பட்டுள்ளன. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் காட்டுத் தீ சம்பவங்களின் எண்ணிக்கை 334 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பராகுவே மற்றும் பொலிவியா எல்லைகளையொட்டி அமைந்துள்ள பந்தனால் ஈரநிலங்களில் மழைக்காலங்களின்போது 80 சதவீதம் நீர் நிறைந்திருக்கும். ஆனால், அக்டோபர், மே மாதங்களில் நீர் வடிவதால் இயற்கை வளம் நிறைந்த அந்தப் பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.