ஜெர்மனியிலேயே மிகப்பெரிய வங்கியான டாய்ச்சபேங்க்கிற்கும்(மொத்த சொத்து மதிப்பு: 1.348 Trillion யூரோ), ஜெர்மனியின் மிக உயரக் கட்டடத்திற்கு சொந்தக்காரரான காமெர்ஸ் பேங்கிற்கும்( உயரம் 850 அடி) கடந்த மாதம் நடந்த நிச்சயதார்த்தம், திருமணம் வரை போகாமல் பாதியிலேயே நின்று போய்விட்டது.
ஆம்! கடந்த மார்ச் மாதம் 17 ம் தேதி, இரண்டு வங்கிகளும் இணைய இருப்பதாத இருவரும் கூட்டாக அறிவித்தனர். அப்படி இணைந்தால் ஐரோப்பாவிலேயே இது 3வது மிகப்பெரிய வங்கியாக மாறியிருக்கும். ஜெர்மனிக்கும் அது ஒரு பெருமையாக இருந்திருக்கும்.
ஆனால் இன்று காலை 10 மணியளவில் வந்த செய்தி அந்த பெருமையின் அடி வேரையே அறுத்தெறிந்துவிட்டது. " இந்த இரண்டு வங்கிகளின் இணைப்பினால் எந்த ஒரு புது நிகழ்வும் உருவாகப்போவதில்லை!" என்று இரண்டு வங்கிகளின் நிர்வாக இயக்குனர்களும் ஒருமித்து அறிவித்துள்ளனர்.
ஜெர்மனியின் பொருளாதாரத்துறை அமைச்சர் திரு.ஓலாஃப் ஸ்லோஷ்(Olaf Scholz) கூறும் போது, "ஒரு ஒரு திடமான வர்த்தக மாடலை முதன்மையாகக் கொண்டு அதனோடு போதிய பொருளாதாரமும் சாத்தியமாகும் போது மட்டுமே இந்த மாதிரியான இணைப்பினால் பலன் உண்டு" என்றார்.
ஜெர்மனி தொழில்துறையைப் பொறுத்தவரையில், "மக்களுக்கு கடன் கொடுக்கும் பிற நிதிநிறுவனங்களும் இவற்றுடன் ஒத்துழைக்கவேண்டும்" என்று SPD கட்சியின்(Sozialdemokratische Partei Deutschlands) பிரதிநிதி கூறினார்.
Deutsche Bank ன் மேற்பார்வை குழு தலைவர் பால் ஆக்லைட்னேர்(Paul Achleitner) பேசும் போது, "எங்கள் வங்கியின் Board of Management குழு பலமுறை ஆய்வு செய்து, இரண்டு வங்கிகளின் இணைப்பு முயற்சியை கைவிடுவதுதான் சரியானது என்று கூறினர்" என்றார்.
ஆக மொத்தத்தில், இணைப்பு என்பது இல்லாமலே போய்விட்டது. அதனால், 30,000 பேர் வரை வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்ற புரளியும் இனி மறைந்து விடும்.
பொருளாதார நிபுணர்கள், இந்த வருடத்தின் முதல் காலாண்டு முடிவில் டாய்ச்சபேங்க்கின் லாபம் 29 மில்லியன் யூரோவாக இருக்கும் என்று கணித்திருந்த வேளையில், 200 மில்லியன் யூரோக்களை எட்டி அது சாதனை படைத்துள்ளது. காமெர்ஸ் பேங்கும் தன் பாதையில் நடை போடத் தொடங்கிவிட்டது.
எது எப்படியோ! இரண்டும் தங்கள் பாதையில் வெற்றி நடை போடவேண்டும் என்பதே விருப்பம்!