பெய்ஜிங்கிற்கு வருகை தந்து பணியறிக்கையை வழங்கிய ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை அதிகாரி கேரி லாம், டிசம்பர் 16ஆம் தேதி பிற்பகல் பெய்ஜிங்கில் சீன அரசுத் தலைலவர் ஷிச்சின்பிங்கைச் சந்தித்தார். இதில், ஹாங்காங்கின் தற்போதைய சூழ்நிலை மற்றும் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் பணிகள் குறித்து கேரி லாம் அறிவித்ததை, ஷிச்சின்பிங் கேட்டறிந்தார்.
அப்போது, ஷிச்சின்பிங் கூறுகையில்
நவம்பர் 14ஆம் தேதி பிரேசில் நாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் நான் நிகழ்த்திய உரையில், ஹாங்காங்கின் நிலைமை பற்றிய நடுவண் அரசின் அடிப்படை நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினேன். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் ஆகியவற்றைப் பேணிக்காப்பதில் நமது மனவுறுதி மாறாது. ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் நமது மனவுறுதி மாறாது.
ஹாங்காங் விவகாரங்களில் எந்த வெளிப்புற சக்தியும் தலையிடுவதை எதிர்க்கும் மனவுறுதி மாறாது என்று உறுதிபட தெரிவித்தார். மேலும், உங்களின் தலைமையில் ஹாங்காங் சிறப்பு நிர்வாக அரசு சட்டப்படி ஆட்சி புரிவதற்கு நாம் தொடர்ந்து உறுதியுடன் ஆதரவு அளிக்கின்றோம். ஹாங்காங் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றுபட்டு, ஹாங்காங் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பி வளர்ந்து வருவதை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்