அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற மோடி நலமா (ஹெளடி மோடி) நிகழ்ச்சியில் பங்கேற்று, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பங்கேற்றார்.
பின்னர் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஏற்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பருவநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதில் பங்கேற்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே திட்டமிடாத நிலையில் திடீரென வருகை தந்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் ஆகியோரின் உரைகளைக் கேட்ட டிரம்ப், பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் செவ்வாய்க்கிழமை (செப். 24) தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் செவ்வாய்கிழமை மதியம் 12:15 மணியளவில் சந்தித்துப் பேசவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவ்னீஷ் குமார் தெரிவித்தார்.