ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளைத் தங்கள் நாட்டிலோ அல்லது பல்வேறு நாடுகளிலோ வெற்றிகரமாகச் செயல்படுத்தும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு சர்வதேச இலக்காளர் விருதை பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த இலக்கை அடைவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பங்களிப்புக்காக இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.
அமெரிக்காவில் செப். 24-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அறக்கட்டளைத் தலைவர் பில்கேட்ஸ் 'Global Goalkeeper Award' விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த விருது எனக்கானது அல்ல, தங்கள் அன்றாட வாழ்வில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அனைத்து நாட்டு மக்களையும் சார்ந்தது. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்கள் பயனடையும் விதமாக சுமார் 11 கோடி கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்காரணமாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்பட்டு வந்த தொற்று நோய்கள் குறைந்துள்ளதாக அறக்கட்டளை மூலம் தெரிவிக்கப்பட்டது. விரைவில் நாடு முழுவதும் முழுமையாக கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோன்று தற்போது ஃபிட் இந்தியா திட்டமும் வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் ஒவ்வொருவரின் ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.