அதிகரித்து வரும் வெப்பநிலை தற்போது உள்ள தொற்றுநோய்கள் ஏற்படுத்தும் உயிரிழப்புகளை விட அதிக உயிரிழப்புகளை உண்டாக்கும் என சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
சிகாகோ பல்கலைக்கழகம் காலநிலை குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வில், “காலநிலை நெருக்கடியினால் பொருளாதார இழப்பு, முதல் உயிரிழப்புகள் வரையிலான பாதிப்புகளை பணக்கார நாடுகள் உட்பட உலகம் முழுவதும் உணரப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “இது கரோனா பாதிப்புடன் மிகவும் ஒத்துப்போகிறது. அதிகரித்து வரும் வெப்பநிலை உலகின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.” என அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
தொடர்ந்து, “அதிகரிக்கும் வெப்பநிலையால் உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள ஏழை நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றன. ஏற்கெனவே வெப்பநிலை இந்த நூற்றாண்டில் மேலும் உயர்ந்து வருவதால் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகள் 100,000 பேருக்கு 200 அல்லது கூடுதலாக அதற்கு மேற்பட்ட இறப்புகளை சந்திக்கின்றன. குளிர் பிரதேசங்களில் உள்ள பணக்கார நாடுகளான நோர்வே மற்றும் கனடா போன்றவை கடுமையான குளிர் காரணமாக குறைவான இறப்புகளை சந்திக்கின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆர்க்டிக் மற்றும் பிற இடங்களில் பெரும் வெப்ப அலைகள் உருவாகியுள்ளன. இந்த வெப்ப உயர்வால் ஏற்படும் மரணங்கள் சில நேரங்களில் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு தெளிவாக உள்ளன. அதாவது கடந்த ஆண்டு கோடையில் பிரான்சில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 1,500 ஆகும்.” என அச்சமூட்டுகிறது.
இந்த மோசமான சூழ்நிலையில் கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக சராசரி உலக வெப்பநிலை அதிகரிப்பு 2100க்குள் 3C ஐ விட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தொழில்களின் வளர்ச்சியானது அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு முக்கியக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. உயரும் வெப்பநிலை வெள்ளம், காட்டுத்தீ மற்றும் கணிக்கமுடியாத புயல்கள் போன்ற பேரிடர்களுக்கு வழிவகுப்பதாகவும் எச்சரித்துள்ளது.
மேலும் வெப்ப அலைகளின் போது மனிதர்களின் மாரடைப்பு பாதிப்[பு எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இந்த ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.பருவநிலை மாற்றம் குறித்து கூடுதல் அக்கறையும், கவனமும் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள இந்த ஆய்வு கரியமில வாயுக்களின் வெளியேற்றம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளது.