பிரிட்டனின் கடன்சுமை முதல்முறையாக 2 லட்சம் கோடி பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
கரோனா பொதுமுடக்க நடவடிக்கைகளால் பல்வேறு நாடுகள் கடுமையான நிதிச்சுமையை எதிர்கொண்டுள்ளன. தொற்று பாதிப்புகளைத் தடுக்க ஒருபுறம் செலவழித்தாலும், வழக்கமான தொழில்நடவடிக்கைகள் முடங்கியுள்ளதால் பொருளாதார சிக்கலில் சிக்கி வருகின்றன.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பிரிட்டன் நாட்டு அரசாங்கத்தின் கடன்சுமை முதன்முறையாக 2 லட்சம் கோடி பவுண்டுகளாக அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளிவிவரங்களுக்கான ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பிரிட்டன் நாட்டின் மொத்தக் கடன் கடந்த ஆண்டை விட 22 ஆயிரத்து 760 கோடி பவுண்டுகளாக அதிகத்துள்ளதாக ஓஎன்எஸ் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, 1960-61 நிதியாண்டுக்குப் பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன்சுமையானது 100 சதவீதத்திற்கு மேல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும் அரசின் செலவுக்கும் வரி வருமானத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு 2 ஆயிரத்து 670 கோடி பவுண்டுகளாக உள்ளது. பிரிட்டன் நாட்டின் கடன்சுமை வழக்கமான தன்மையை விட அதிகமாக உள்ளதாக ஓஎன்எஸ் எச்சரித்துள்ளது.