அமெரிக்காவின் மதிப்புமிக்க நிதிநிலை அறிக்கையை நீரா தாண்டன் உருவாக்குவார் என அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் அலுவலக மேலாண்மை மற்றும் நிதிக் குழுவின் இயக்குநராக நீரா தாண்டன் பொறுப்பேற்பார் என்று தகவல்கள் வெளிவந்தன. தற்போது இத்தகவல் பைடனால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
விடியோ பதிவொன்றில் பேசிய ஜோ பைடன், நீரா தாண்டன் குறித்து, 'உழைக்கும் அமெரிக்க மக்களின் போராட்டங்களையும் உணர்வுகளையும் நீரா தாண்டன் நன்றாக புரிந்து வைத்துள்ளார். அவரை நீண்ட காலமாக எனக்குத் தெரியும். அனுபவங்கள் அதிகம் கொண்ட அவர் சிறந்த கொள்கைகளை உருவாக்குவார். இந்தியாவிலிருந்து வந்து குடியேறி போராடி வெற்றி பெற்றவர். அமெரிக்காவின் நிதிநிலை அறிக்கையை உருவாகும் தெற்காசிய முதல் பெண்மணி நீரா.
அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்கும் கமலா ஹாரிஸ் என்ற பெண்மணியும் எங்களுடன் இருக்கிறார். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், வளர்ச்சியை நோக்கி செல்லவும் நீரா தாண்டனின் நிதிநிலை அறிக்கை உதவும். இந்த நிதிநிலை அறிக்கை எங்களின் கொள்கைகளை பிரதிபலிப்பதாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.