பிரிட்டனில் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு பிரிட்டன் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
உலக அளவில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் பயனர்களின் பாதுகாப்பும் அவர்களின் தரவுகள் திருடப்படுவதும் குறித்த புகார்களும் எழுந்து கொண்டே தான் உள்ளது.
இந்நிலையில் பிரிட்டனில் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்தப் புதிய மசோதாவின்படி தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தத் தவறினால் சமூக வலைத்தள நிறுவனம் சுமார் 1.8 கோடி யூரோக்கள் வரை அபராதம் செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயனர் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களை தடுப்பது மற்றும் பயங்கரவாத உள்ளடக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றை சமூக வலைத்தள நிறுவனங்கள் உறுதிப்படுத்துவது கட்டாயமாகிறது.
பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் அல்லது செயல்பாட்டைக் குறித்து எளிதில் புகாரளிக்கும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரும் இந்த மசோதா, பாதுகாப்பு நடவடிக்கை குறித்த அறிக்கைகளையும் வெளியிட வேண்டும் எனக் கோரியுள்ளது.