

இஸ்லாமாபாத்: உலகளாவிய கரோனா தொற்றுக்கு காரணம் என்று தனிநபர் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க தூதரகத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வியாழனன்று லாகூர் சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த நடவடிக்கை தொடர்பாக, அங்கிருந்த மூத்த வழக்கறிஞரான வசீம் யூசுப் கான் என்பவர் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது:
லாஹூரைச் சேர்ந்த ரசா அலி என்ற நபர் இந்த வழக்கினைத் தொடர்ந்துள்ளார். சமீபத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ள அவர் தனது மனுவில் லாஹூரிலுள்ள அமெரிக்கத் தூதர், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவின் அலட்சியத்தால் கரோனா வைரசானது கட்டற்று உலகம் முழுக்கப் பரவியதால்தான் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மட்டுமல்லாமல் நம் நாட்டிற்கே பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கின் எதிர்மனுதாரர்களான அமெரிக்கா சர்வதேச சமூகத்திற்கான தனது கடமையினை சரிவரச் செய்யத் தவறியதால்தான், லட்சக்கணக்கான மக்களின் உயிர் தற்போது ஆபத்தில் உள்ளது.
அமரிக்காவில் கட்டுப்பாடில்லாமல் கரோனா வைரஸ் பரவியதும், இந்தகாரம் தொடர்பாக அந்த நாட்டுத் தலைமையின் உறுதியற்ற நிலைப்பாடுகளும்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கரோனா தொற்று பரவக் காரணமாகும்.
எனவே இதன் காரணமாக 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு தரப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு தொடர்பாக எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், அவர்கள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்த மனு தொடர்பாக முடிவெடுக்கப்படும் வரை அமெரிக்க தூதர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிப்பது தொடர்பாக, நீதிமன்றம் சட்ட ஆலோசனை கேட்டிருப்பதாக, உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.