அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,747 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கில் இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 59,747 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 33,01,820 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் உள்பட மொத்த உயிரிழப்பு 1,35,171 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை 15 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.