

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில் உள்ள சீனத் தூதரகத்தை 72 மணி நேரத்தில் மூடுமாறு சீனாவை அமெரிக்கா கண்டிப்புடன் கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் புதனன்று செய்தியொன்று வெளியாகி இருந்தது. அதன்படி செவ்வாய் மாலை ஹூஸ்டன் நகரத்தில் உள்ள சீனத் தூதரகத்தின் வளாகத்தில் அதிகாரிகள் ஆவணங்கள் சிலவற்றை தீயிட்டு எரித்ததாக கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக செய்தியாளர் ஒருவர் வெளியிட்ட விடியோவில், வளாகத்தில் வெளியே வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான குப்பைத்தொட்டிகளில் ஆவணங்கள் எரிந்து கொண்டிருக்க, சிலர் அதனைச் சுற்றி நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
ஹூஸ்டன் நகர தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும், ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஹூஸ்டன் நகரத்தில் உள்ள சீனத் தூதரகத்தை 72 மணி நேரத்தில் மூடுமாறு சீனாவை அமெரிக்கா கண்டிப்புடன் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இத்தகைய மூர்க்கத்தனமான நியாமற்ற அமெரிக்க-சீன உறவினை சீரழிக்கக் கூடிய நடவடிக்கையினை சீனா கடுமையாக கண்டிக்கிறது. இத்தகைய தவறான முடிவினைத் திரும்பப் பெறுமாறு அமெரிக்காவை நாங்கள் வலியுறுத்துகிறோம். இல்லவிட்டால் சீனா சரியான மற்றும் தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.