பொதுவெளியில் முக்கியமாக சாலைகளில் நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்க ஜப்பான் யமடோ நகர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மனித வாழ்வில் மொபைல் போனும், இணையமும் பின்னிப் பிணைந்து விட்டன. வேலை செய்யும்போது, தூங்கும்போது என அனைத்து நேரங்களிலிலும் மொபைல் போனுடன் நாம் செலவழிக்கும் நேரம் அதகிரித்து வருகிறது.
சாலைகளில் நடக்கும்போதும், சாலையைக் கடக்கும்போதும் கூட ஆபத்து என தெரிந்தும் மொபைலில் பேசிக்கொண்டும், செய்தி அனுப்பிக் கொண்டும் மக்கள் செல்வதை நாம் காண முடிகிறது. இதனால் சில சமயங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. எனினும் இந்த பழக்கத்தை மக்கள் விட்டபாடில்லை.
இந்நிலையில் இதனை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக நடக்கும்போது மொபைல் போன் உபயோகிக்கத் தடை விதிக்க ஜப்பானில் உள்ள ஒரு நகரம் முடிவு செய்துள்ளது.
டோக்கியோவிற்கு அருகிலுள்ள யமடோ நகரில் திங்களன்று நகர சட்டசபையில் இதற்கான மசோதா பிறப்பிக்கட்டுள்ளது.
நடைபயிற்சி செய்யும் போது பாதசாரிகள் மொபைல் போனை பயன்படுத்துவதால் விபத்துகள் ஏற்படுத்துவது ஜப்பானில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கவே இவ்வாறான ஒரு முடிவை எடுத்துள்ளோம். மேலும், மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். அடுத்த மாதத்தில் இருந்து இது யமடோ நகரில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று நகர அதிகாரி மசாகி யசுமி தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் 100 மில்லியன் யென் (70 லட்சம் ரூபாய்) வரை இழப்பீடு கோருகின்றன என்றும் கூறினார்.