தென்னாப்ரிக்காவில் வசித்து வந்த மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் சதீஷ் துபேலியா கரோனாவுக்கு பலியானார்.
தனது 66-வது பிறந்த நாளை மூன்று நாள்களுக்கு முன்பு கொண்டாடிய சதீஷ் துபேலியா கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பலியானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
துபேலியாவின் சகோதரி உமா துபேலியா இது பற்றி கூறுகையில், நிமோனியா காய்ச்சல் பாதித்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. 24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்
சதீஷ் துபேலியா பெரும்பாலான தனது வாழ்நாளை ஊடகங்களுக்காகவே செலவிட்டுள்ளார். புகைப்படக் கலைஞர், விடியோ பதிவாளர் என தனது பணியை மேற்கொண்ட சதீஷ், காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையில் அங்கம் வகித்தவர்.
தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சதீஷுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு பலியானார் என்று தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் இளைய மகன் மணிலால் காந்திக்கு மூன்று பேரப்பிள்ளைகள், உமா துபேலியா, சதீஷ் துபேலியா மற்றும் கீர்த்தி மேனன்.
மகாத்மா காந்தி தென்னாப்ரிக்காவில் விட்டுவந்த பணிகளை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மணிலால் காந்தி கவனித்து வந்தார். தற்போது மகாத்மா காந்தியின் பெயரில் ஜோஹன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற வரும் பல்வேறு பணிகளை மணிலால் பேத்தி கீர்த்தி மேனன் கவனித்துக் கொள்கிறார்.