போலந்து நாட்டில் நீருக்கடியில் கண்டறியப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்திய வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக வெடித்தது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
ஜெர்மனியுடன் போலந்தின் எல்லையில் உள்ள ஓடர் நதியுடன் பால்டிக் கடலை பியாஸ்ட் கால்வாய் இணைக்கிறது. இந்நிலையில் 1945ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டனின் ராயல் விமானப்படை பயன்படுத்திய டால்பாய் வெடிகுண்டு பியாஸ்ட் கால்வாயில் கண்டறியப்பட்டது.
5400 கிலோ எடையில் இருந்த இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்பொருட்டு அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து கடலோரப் பாதுகாப்புப் படையின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையின் போது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு நீருக்கடியில் வெடித்தது. எனினும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“செயலிழப்பு நடவடிக்கையின் போது வெடிப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு குறித்து மேலும் அச்சப்படத் தேவையில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.” என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.