லெபனான் புதிய பிரதமராக தூதரக அதிகாரி நியமனம்
லெபனானின் புதிய பிரதமராக முஸ்தபா ஆதிப் (48) நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை ஆட்சியமைக்குமாறு அதிபர் மிக்கேல் அவுன் கேட்டுக்கொண்டுள்ளார்.


பெய்ரூட்: லெபனானின் புதிய பிரதமராக முஸ்தபா ஆதிப் (48) நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை ஆட்சியமைக்குமாறு அதிபர் மிக்கேல் அவுன் கேட்டுக்கொண்டுள்ளார். ஜெர்மனிக்கான லெபனான் தூதராக முஸ்தபா ஆதிப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த ஆக. 4-ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2,700 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 190 பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர். தலைநகரில் பல இடங்களில் குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்தில் பிரதமர் ஹசன் டயப் தலைமையிலான அரசு ராஜிநாமா செய்தது.
இதுவரையில்லாத பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, வறுமை, பணவீக்கம் என ஏற்கெனவே சிக்கலில் உள்ள லெபனான் நாட்டில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தாதவரை உதவிகள் அளிக்க முடியாது என பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மறுத்துவிட்டனர். சர்வதேச நாணய நிதியமும் உதவியளிக்க மறுத்தது.
இதைத் தொடர்ந்து, புதிய பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜெர்மனிக்கான லெபனான் தூதராகப் பணியாற்றி வரும் முஸ்தபா ஆதிப்பை பிரதமராக நியமிக்கும்படி முன்னாள் பிரதமர்கள் 4 பேர் பரிந்துரை செய்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சக்திவாய்ந்த ஹிஸ்புல்லா இயக்கமும் ஆதிப்பை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, புதிய பிரதமர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் அதிபர் அதிபர் மைக்கேல் அவுன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 128 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 90 வாக்குகள் ஆதிப்புக்கு ஆதரவாக கிடைத்ததையடுத்து, அவரை புதிய பிரதமராக அதிபர் அறிவித்தார். மேலும், ஆட்சியமைக்கவும் ஆதிப்பை அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர் ஆதிப் செய்தியாளர்களிடம் கூறுகையில், லெபனான் மக்கள் மற்றும் சர்வதேச சமுதாயத்தின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு முக்கியமான சீர்திருத்தங்களை அமல்படுத்தும் வகையில் புதிய அரசை விரைவாக அமைப்பதே எனது முதல் பணி என்றார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் லெபனானுக்கு வருகைதரவுள்ள நிலையில் புதிய அதிபர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வெடிவிபத்துக்கு பின்னர் மேக்ரான் 2-ஆவது முறையாக லெபனானுக்கு வருகை தருகிறார். இந்தப் பயணத்தின்போது, நாட்டை நெருக்கடி, அரசியல் முட்டுக்கட்டைகளிலிருந்து மீட்க புதிய அரசியல் ஒப்பந்தத்தை வகுக்குமாறு லெபனான் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.
ஜெர்மனிக்கான லெபனான் தூதராக 2003}இல் இருந்து பணியாற்றி வரும் ஆதிப், லெபனானின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான நஜிப் மிக்காட்டிக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். 2005}06இல் நாட்டின் புதிய தேர்தல் சட்ட வரைவை தயாரித்த குழுவுக்கு பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். நாட்டின் வடபகுதி நகரமான திரிபோலியை சேர்ந்த ஆதிப், சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...