ஸ்பெயினில் கடந்த 4 நாள்களாக குறைந்து வந்த பலி எண்ணிக்கை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின் மிக முக்கியமானதாகும். நோய்த் தொற்றால் அதிகம் பாதித்தோர் எண்ணிக்கை கொண்ட நாடாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகவும், நோய்த் தொற்றால் அதிகம் பலியானோர் எண்ணிக்கை கொண்ட நாடாக இத்தாலிக்கு அடுத்தபடியாகவும் ஸ்பெயின் உள்ளது.
அங்கு கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 950 பேர் பலியாகினர். அதன் பிறகான நாள்களில் பலி எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 4 நாள்களாக தொடர்ந்து குறைந்து வந்த பலி எண்ணிக்கை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் உயர்ந்துள்ளது. அந்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஏற்படும் தினசரி இறப்பு விகிதம் செவ்வாய்கிழமை 743 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம், அங்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 13,798 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.