குவைத் சிட்டி: கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக குவைத்தில் வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் வாராந்திரத் தொழுகை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸானது இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது. இதுவரை உலகில் லட்சக்கணக்கானோர் இதனால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக குவைத்தில் வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் வாராந்திரத் தொழுகை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் மறு உத்தரவு வரும் வரை வெள்ளிக்கிழமைகளில் மசூதிகளில் வழக்கமாக நடைபெறும் பிரசங்கங்கள் மற்றும் தொழுகை ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.