பாகிஸ்தானில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் உருவாகி, உலகம் முழுவதும் 164 நாடுகளுக்குப் பரவியுள்ள கரோனா வைரஸ், இதுவரை சுமாா் 2.19 லட்சம் பேரைத் தொற்றியுள்ளது. அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. அதே போல பலியானர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9,000ஐ நெருங்கியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானிலும் கரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸுக்கு இதுவரை 301 பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தெற்கு மாகாணமான சிந்துவில் 208 பேரும், கிழக்கு மாகாணமான பஞ்சாபில் 33, பலூசிஸ்தானில் 23, கைபர் பக்துன்க்வாவில் 19, தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. இந்த 2 இறப்புகளும் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் நிகழ்ந்துள்ளது. இதனை மாகாண சுகாதார அமைச்சர் தைமூர் கான் ஜாக்ரா உறுதிப்படுத்தினார்.