கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டனில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திரும்பபெறப்பட்டுள்ளன. பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டபோதிலும் 10 நாள்களுக்கு விடுதியில் தங்கி தனிமைப்படுத்தி கொள்ள வேண்டியிருந்தது.
பிரிட்டனில் அமலில் இருந்த இந்த கட்டுப்பாடு இன்றுடன் திரும்பபெறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கட்டுப்பாடுகள் அதிகமுள்ள சிவப்பு பட்டியலிருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவிலிருந்து பிரிட்டன் வரும் தடுப்பூசி செலுத்தி கொண்ட பயணிகள் அனைவரும் தங்களது வீட்டிலோ அல்லது அனுமதிக்கப்பட்ட இடங்களிலோ தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன?
அதேபோல், அரசு அனுமதித்த இடங்களில் 10 நாள்கள் தனிமைப்படுத்தி கொள்ள கூடுதலாக 1,750 பவுண்டுகள் கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது. இனி, அதை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அல்லது ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுளளது.
உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகிறது. அதில், பிரிட்டனில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை தவிர்த்து வேறு என்ன தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு எல்லாம் விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை ஆலோசனை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகி்றது.
ஆக்ஸ்போர்டு/ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.