சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார் அதிபர் அஷ்ரஃப் கனி

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வருவதை அடுத்து அந்நாட்டு  அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

News image

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி

Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:42 am


காபூல்: ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வருவதை அடுத்து அந்நாட்டு  அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தியதுடன் ஒரே வாரத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதிகள், விமான நிலையங்கள் மற்றும் தூதரகங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதையடுத்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் அவரவர் நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானின் 90 சதவிகித நிலப்பரப்பைத் தலிபான்கள் கைப்பற்றியதுடன் பல முக்கிய நகரங்களை அடுத்தடுத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

தொடர்ந்து தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி வந்த தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். 

இந்நிலையில், அதிபர் அஷ்ரஃப் கனி தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன் நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் சென்றுள்ளதாக மூத்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தலிபான்களால் காபூல் சுற்றி வளைக்கப்பட்டதால் விமானம் மூலம் அஷ்ரஃப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசுப்படைகள் சரணடைந்ததால் உரிய பாதுகாப்பு தருவதாக தலிபான்கள் உறுதி அளித்துள்ளாக தகவல்கள் கூறுகின்றன.  

இதனிடையே நாளைக்குள் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்றும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆட்சி அமைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.