

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை சம்பவத்தைக் குரிப்பிட்டு மேற்கத்திய ஜனநாயகம் நிலையற்றது என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்று வந்தது.
அப்போது அமெரிக்க அதிபரின் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முறியடிக்கும் முயற்சியாக, புதன்கிழமை காலை டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர்.
இதற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி மேற்கத்திய ஜனநாயகம் நிலையற்றது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “அமெரிக்காவில் நடந்தது மேற்கத்திய ஜனநாயகத்தின் தோல்வியைக் காட்டுகிறது. டிரம்ப் தனது நாட்டின் நற்பெயரை கெடுத்துள்ளார்” என்று ரூஹானி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக ஈரான் அதிபர் ரூஹானி முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.