கரோனா தோற்றம் குறித்த ஆய்வுக்கு சீன அரசு முறையாக ஒத்துழைக்க வேண்டும் என ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனத்தின் வூஹான் மாகாணத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் தொற்று பரவல் தீவிரமடைந்ததால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து உலக நாடுகள் சீன அரசை விமர்சிக்கத் தொடங்கின.
சீன அரசு திட்டமிட்டு கரோனா வைரஸை பரப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்த நிலையில் சீனாவில் ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு அதனை மறுதலித்தது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்வதேச ஆய்வுக்குழுவை சீன அரசு தங்கள் நாட்டிற்குள் அனுமதித்து முறையாக ஒத்துழைக்க வேண்டும் என ஜெர்மனி அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், “கரோனா வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வுக்கு சீன அரசின் ஒத்துழைப்பு அவசியம்” எனத் தெரிவித்தார்.