ஹங்கேரி அரசு தனது மக்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் 3வது தவணை தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஆர்பன் தனது மக்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 3வது தவணை தடுப்பூசி கிடைக்கும் என அறிவித்துள்ளார். வானொலி மூலம் தனது நாட்டு மக்களுடன் உரையாடிய அவர், ''இந்த 3வது தவணை தடுப்பூசியானது வயது, உடல் நிலை ஆகியவற்றைப் பொறுத்து அளிக்கப்படும்.
இரண்டாவது தவணை செலுத்தப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகே, 3 வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இரண்டாவது தவணையாக என்ன தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ, அதற்கு மாற்றாக வேறு தடுப்பூசி செலுத்திகொள்வது குறித்து மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள்.
மேலும் 3வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயப்பட தேவையில்லை. மக்கள் பயப்படவில்லை என்றால், மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது எனக் கருதினால், அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் என்ன தவறு ?'' என்று தெரிவித்தார்.
சில தடுப்பூசிகள் முழுமையான பலனைத் தரவில்லை என்று கருதியே இத்தகைய முடிவை ஹங்கேரி அரசு எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் போன்ற நாடுகள் தங்கள் மக்களுக்கு வழங்கிய சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி போதிய பலனை அளிக்காததன் காரணமாக தம் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தியிருந்தது.
ஹங்கேரி அரசும் மக்களுக்கு முதலில் சினோஃபார்ம் தடுப்பூசியை அளித்தது. ஆனால் அவை கரோனா தொற்றிற்கு எதிராக வலிமையாக செயல்படாததால், அந்நாட்டு மக்களை மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.