ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேன் உள்பட பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமாகிவரும் நிலையில், குயின்ஸ்லான்ட் தலைநகர் பிரிஸ்பேன் உள்பட பல பகுதிகளில் இன்று முதல் (சனிக்கிழமை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து குயின்ஸ்லான்ட் மாநில துணை முதல்வர் ஸ்டீவன் மைல்ஸ் கூறுகையில், "அடுத்த மூன்று நாள்களுக்கு பிரிஸ்பேன் உள்பட பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோர் வீட்டிலிருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவாகவும் திடமாகவும் செயல்பட்டால் மட்டுமே டெல்டா வகை கரோனாவை தோற்கடிக்க முடியும்" என்றார்.
பள்ளி மாணவர் ஒருவரிடமிருந்து பரவிய டெல்டா வகை கரோனாவால் இன்று மட்டும் ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை சுகாதார அலுவலர் ஜீனெட் யங் கூறுகையில், "வெளிநாட்டிலிருந்து தாய்நாடு திரும்பி தனிமைப்படுத்தி கொண்டுள்ள பயணிகளிடமிருந்து கரோனா பரவியிருக்கலாம் என மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆனால், பரவல் எங்கிருந்து தொடங்கியது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை" என்றார்.
மளிகை பொருள்களை வாங்க உள்பட அவசியமான காரணங்களுக்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஐந்து வார காலமாக ஊடரங்கு அமலில் உள்ளது. சிட்னியில் இன்று மட்டும் 210 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.