உலகளவில் இதுவரை 262 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் ஒட்டு மாத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நூறு பேரில் 34 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளின் அரசால் அளிக்கப்படும் புள்ளி விவரங்களைத் திரட்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, கண்டங்கள், நாடுகள் என பல பகுதியாகப் பிரிக்கப்பட்டு, இந்த தடுப்பூசி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆப்ரிக்க கண்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மற்ற கண்டங்களைக் காட்டிலும் மிக மெதுவாக செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு சில நாடுகளில் இன்னமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் மிகப்பெரிய அளவிலான முகாம்கள் தொடங்காமலேயே உள்ளன.
ஒட்டுமொத்தமாக இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளில், மிக பணக்கார நாடுகள் முதல் குறைந்த வரவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்த 86 சதவீதம் பேருக்கும், ஏழை நாடுகளைச் சேர்ந்த 0.3 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 262,00,00,000 அதாவது 262 கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி 27,09,08,312 அதாவது 27 கோடிப் பேர் இந்தியர்கள்.
இந்தியாவில் நூறு பேரில் 20 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொணடுள்ளனர். ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 16 சதவீதமாகவும், இரண்டு தவணையையும் செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 3.6 சதவீதமாகவும் உள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான பேராயுதமாக இருப்பது தடுப்பூசிகள்தான். அந்த வகையில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் இன்றைய தடுப்பூசி நிலவரம்..
குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று 28 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை கிடைத்த தகவல்படி, 38,24,408 அமர்வுகள் மூலம் மொத்தம் 28,00,36,898 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,39,996 தடுப்பூசிகள் போடப்பட்டன.