இந்தியாவில் ஒரு டோஸ் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் பொருள் நிபுணர் குழு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு கடந்தாண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்காக, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியுடன் டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் இணைந்துள்ளது.
தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் குறித்த தரவுகள் ஆகியவை சமர்பிக்கப்பட்டதையடுத்து பரிசோதனையை நடத்த பொருள் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியதாக மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தடுப்பூசி செலுத்தப்படும் பட்சத்தில் எத்தனை காலம் வரை நோய் எதிர்ப்பு சக்தி உடலில் நீடிக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, அதன் ஆயுள்காலம் குறித்த தரவுகள் சமர்பிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி 79.4 சதவிகிகம் செயல்திறனை கொண்டுள்ளதாக ஸ்புட்னிக் லைட் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு ஒப்புதல் வழங்கும்பட்சத்தில், இந்தியாவில் பயன்பாட்டுக்குவரும் முதல் ஒரு தவணை தடுப்பூசி என்ற பெருமையை ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி பெறும்.
ரஷ்யாவில், 60 வயதுக்கு மேலானவர்களுக்கு ஸ்புட்னிக் லைட் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தாது என்று மருந்து நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.