இலங்கையில் அக்டோபா் மாத மத்தியில் கரோனா பாதிப்பு உச்சத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவ தளபதி மற்றும் தேசிய கரோனா கட்டுப்பட்டு மையத்தின் தலைவருமான ஷவேந்திர சில்வா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இலங்கையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, இரவு நேர ஊரடங்கானது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,000 ஆகவும், பலி எண்ணிக்கை 6,096 ஆகவும் உள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், உருமாறிய டெல்டா வகை கரோனா வேகமாகப் பரவி வருவதால், நாட்டில் பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் முழுமையாக நிரம்பி வருவதாகவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நாட்டில் இதே நிலை நீடித்தால் தினசரி கரோனா பாதிப்பு வரும் செப்டம்பா் மாத மத்தியில் 6,000 என்ற அளவில் உயர வாய்ப்புள்ளது எனவும், தினசரி உயிரிழப்பு அக்டோபா் மாத மத்தியில் 220 என்ற அளவுக்கு உயர வாய்ப்புள்ளது எனவும் மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய 4 வார கால பொதுமுடக்கத்தை அறிவிக்க அந்நாட்டு மருத்துவ நிபுணா் குழு பரிந்துரைத்து வந்த நிலையில், தற்போது இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்படுபவா்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய இலங்கை முடிவெடுத்துள்ளது.