தனது தாய்க்கு முறையான மருத்துவ ஆலோசனை வழங்கவில்லை எனக்கூறி, வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு லட்சக்கணக்கில் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ஷோ ஜம்பிங் விளையாட்டு வீரரான ஏவி தும்பேஸ், தனது தாயின் மருத்துவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, தன் தாய் கருத்தரித்தபோது, முறையான ஆலோசனை வழங்கியிருந்தால், ஸ்பைனா பைஃபிடா என்ற குறைபாட்டுடன் தான் பிறந்திருக்க மாட்டேன் என ஏவி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
"குழந்தையைப் பாதிக்கும் ஸ்பைனா பைஃபிடாவின் அபாயத்தைக் குறைக்க ஃபோலிக் ஆசிட் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டும் என்று தன் தாயிடம் மருத்துவர் மிட்செல் கூறியிருந்தால், அவர் கர்ப்பமாக இருப்பதைத் தள்ளிப் போட்டிருப்பாள். நான் பிறந்திருக்கவே மாட்டேன்" என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முதுகெலும்பு பிரச்னையால், 24 மணி நேரமும் ஒரு விதமான குழாயை பொருத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளதாகவும் ஏவி குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட லண்டன் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி் ரோசாலிண்ட் கோ, "ஏவியின் தாய்க்கு சரியான பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனை வழங்கப்பட்டிருந்தால், அவர் கருத்தரிப்பதற்கான முயற்சிகளை தாமதப்படுத்தியிருப்பார்.
இந்த சூழ்நிலையில், அவர் தாமதமாக கருத்தரித்திருப்பார். இதன் காரணமாக, சாதாரண ஆரோக்கியமான குழந்தை பிறந்திருக்கும்" என்றார். இதையடுத்து, ஏவிக்கு பெரிய அளவிலான நஷ்ட ஈட்டை வழக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து கூறிய ஏவியின் வழக்கறிஞர்கள், "எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது கணக்கிடப்படவில்லை. ஆனால் அது ஒரு பெரிய தொகையாக இருக்கலாம், ஏனெனில் அது அவரது வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் செலவை ஈடுகட்ட வேண்டும்" என்றார்.
முன்னதாக, இதுகுறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த ஏவியின் தாயார், "மருத்துவர் மிட்செல் எனக்கு சரியாக அறிவுரை கூறியிருந்தால், நான் கர்ப்பம் தரிக்கும் திட்டத்தை தள்ளிப் போட்டிருப்பேன். நல்ல உணவைக் எடுத்து கொண்டால், நான் ஃபோலிக் அமிலத்தை உட்கொள்ள வேண்டியதில்லை என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது" என்றார்.
முறையான மருத்துவ ஆலோசனை வழங்க தவறும் பட்சத்தில், தீவிரமான உடல்நிலை குறைபாட்டுடன் குழந்தை பிறந்தால், அதற்கு மருத்துவரே பொறுப்பு என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.