வாஷிங்டன்: புதிதாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா வைரஸின் ஆரம்ப நாள்களில் தெரிய வந்திருக்கும் தீவிரத்தன்மை குறித்த ஆய்வுகள் சற்று நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாக அமெரிக்க பேரிடர் ஆலோசகர் அந்தோணி பாஸி ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.
எனினும், இது குறித்த மேலும் பல்வேறு தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா வைரஸின் பல மடங்கு உருமாறிய தொற்றே ஒமைக்ரான். இது முதன் முதலில், தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் குறித்து, தற்போது திட்டவட்டமான ஒரு தகவலை அளிக்க முடியாது. இது மிகவும் குறைந்த காலமே. ஆனால் இதுவரை கிடைத்திருக்கும் விவரங்களின் அடிப்படையில், ஒமைக்ரானின் தீவிரத்தன்மை கூறப்பட்டதைப் போல இருக்கவில்லை.
இதுவரை கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஒமைக்ரான் வைரஸ் குறித்த தகவல்கள், சற்று நம்பிக்கையளிப்பதாகவே உள்ளது.
இதற்கிடையே, மருத்துவ நிபுணர்களோ, தென்னாப்ரிக்காவில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வரும் வாரங்களில், இளம் வயதினருக்கும், மோசமான கரோனா பாதிப்பும் அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர்.
ஏற்கனவே கண்டறியப்பட்ட கரோனா வைரஸ்களைக் காட்டிலும், பல மடங்கு உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ், முந்தைய வைரஸ்களைக் காட்டிலும், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதா என்பது குறித்து ஆய்வகங்களில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கரோனா தடுப்பூசிகளின் எதிர்ப்புத் திறன் குறைவதைக் காண வேண்டி இருக்குமென்றால், அதுதான் உண்மையான அபாயநிலை என்று மாடெர்னா தடுப்பூசி உற்பத்தியின் தலைவர் ஸ்டீஃபன் ஹோஜ் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியின் எதிர்ப்பாற்றல் எந்த அளவுக்குக் குறையும் என்பதுதான் தெரிய வேண்டும். டெல்டா வகை கரோனாவைப் பொறுத்தவரை, தடுப்பூசி பெரிய அளவில் எதிர்ப்பாற்றலை வெளிப்படுத்தியது. ஆனால் தற்போது, இது 50 சதவீதமாகக் குறையலாம், அப்படியிருந்தால், நாம் மீண்டும் தடுப்பூசி செலுத்துவது தேவைப்படும் என்றார்.
தற்போது வரை இந்தியா உள்பட சுமார் 40 நாடுகளில் ஒமைக்ரான் வகை கரோனா பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.