ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பது அந்நாட்டு அரசுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டே நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டி கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
ஆரம்பம் முதலே கரோனா தொற்று பரவலின் மத்தியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தாமல் அரசு விளையாட்டு போட்டியில் கவனம் செலுத்துவதாக குற்றச்சாட்டை எழுப்பினர்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் டோக்கியோவில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை டோக்கியோவில் பதிவான அதிகபட்ச கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,485 ஆக உள்ள நிலையில் புதன்கிழமை 1149 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு பல்வேறு நாட்டு விளையாட்டு வீரர்கள் டோக்கியோவிற்கு வருகை புரிந்து வரும் சூழலில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய ஜப்பான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.