ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவதற்கு மத்தியில் ஜப்பானில் மேலும் 4 நகரங்களுக்கு கரோனா அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெற கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து ஜப்பானின் மேலும் 4 நகரங்களுக்கு கரோனா அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சைதமா, கனகவா, சிபா, ஒசாகா ஆகிய நகரங்களில் ஆகஸ்ட் 2 முதல் 31ஆம் தேதி வரை அவசரநிலை கடைபிடிக்கப்படும் என பிரதமர் சுகா அறிவித்துள்ளார்.
"டோக்கியோ மற்றும் மேற்கு பெருநகரப் பகுதிகளில் நாம் இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய வேகத்தில் நோய்த்தொற்றுகள் பரவி வருகின்றன" என்று தெரிவித்த பிரதமர் சுகா, “இதேவேகத்தில் கரோனா பரவல் அதிகரித்தால் ஜப்பானின் மருத்துவக் கட்டமைப்பு சீர்குலைந்துவிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க | சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
மேலும் டோக்கியோவைச் சுற்றியுள்ள ஹொக்கைடோ, கியோட்டோ, ஹியோகோன் டி ஃபுகுயோகா உள்ளிட்ட 5 நகரங்களிலும் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. டோக்கியோவில் வியாழக்கிழமை ஒருநாள் நிலவரப்படி புதிதாக 3,865 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.