நடப்பாண்டின் இறுதிக்குள் 5 வயதுக்குட்பட்ட 32 லட்சம் ஆப்கானிஸ்தான் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவர் என ஐக்கிய நாடுகள் அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருப்பதால் சர்வதேச நிதியைப் பெறவது தடைபட்டுள்ளது.
இதையும் படிக்க | கடந்த வாரத்திலும் கரோனா பாதிப்பு குறைவு: உலக சுகாதார அமைப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து அண்டைநாடுகளுக்கு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் பலரும் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு தவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.
5 வயதுக்குட்பட்ட ஆப்கன் குழந்தைகள் உணவுப் பற்றாக்குறை காரணமாக ஊட்டச்சத்துக் குறைபாட்டில் தவித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. நடப்பாண்டின் இறுதிக்குள் 32 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படுவர் என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | 2021 வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு
ஆகஸ்ட் மாதத்தில் தலிபான்கள் பொறுப்பேற்ற நிலையில் அந்நாட்டில் தொடர்ந்து தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தண்ணீர், உணவு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்காமல் 1.4 கோடி மக்கள் தவித்து வருவது தெரியவந்துள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சம் குழந்தைகள் பலியாகும் சூழல் நிலவி வருவதாகவும் உலக நாடுகள் உறுதியளித்தபடி தங்களது நிதியை உடனடியாக வழங்காவிட்டால் இந்த பாதிப்பில் இருந்து மீள முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.