ஆப்கானிஸ்தானில் இன்னும் 439 அமெரிக்கர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தொடர்பில் உள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான் படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுவதுவாக அங்கிருந்து வெளியேறியது. அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் உள்நாட்டுப் போரில் பங்கேற்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
இதையும் படிக்க | காலநிலை மாற்றத்திற்கு எதிரான முதலீட்டில் 9ஆவது இடத்தில் இந்தியா
இந்நிலையில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கோலின் கஹ்ல், ஆப்கானிஸ்தானில் 439 அமெரிக்கர்கள் உள்ளதாகவும், அவர்களில் 363 பேருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 176 பேர் மட்டுமே அமெரிக்கா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட கோலின் கஹ்ல் அவர்களை மீட்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பாகிஸ்தானுக்கு ரூ.22.5 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கும் செளதி அரேபியா
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய நிலையில் அந்நாட்டில் அமெரிக்கர்கள் 200க்கும் குறைவானவர்களே இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.