பிரதமர் மோடி போப் ஆண்டவரை சந்தித்ததைத் தொடர்ந்து, வாட்டிகன் நகரிலிருந்து சனிக்கிழமை புறப்பட்டு சென்றார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அவருடன் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். போப் ஆண்டவரை சந்தித்த மோடி, இந்தியா வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக இச்சந்திப்பு நீண்டது. இதுகுறித்து மோடி ட்விட்டர் பக்கத்தில், "போப் பிரான்சிஸ் அவர்களுடன் மிகவும் அன்பான சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பலதரப்பட்ட பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது, மேலும் அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தேன்" என பதிவிட்டுள்ளார்.
கரோனா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு உயர் மட்ட அலுவலர்கள் ஆலோசனை நடத்தவிருந்த நிலையில், மோடி, போப் ஆண்டவர் ஆகியோர் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் அழைப்பின்பேரில் ஜி - 20 மாநாட்டில் கலந்து கொள்தவற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரோமுக்கு சென்றுள்ளார்.
வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஸ் வர்தன் இதுகுறித்து நேற்று கூறுகையில், "போப் ஆண்டவருடன் பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசுவதற்கு முன்பு என்ன பேச வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே திட்டம் வகுக்கப்படாமல் இருப்பதுதான் பாரம்பரியம் என்று நான் நம்புகிறேன்.
நாங்கள் அதை மதிக்கிறோம் என்று நினைக்கிறேன். அனைவருக்குமான முக்கியமாக கருதப்படும் பிரச்னைகள், பொதுவான உலகளாவிய கண்ணோட்டங்கள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும்" என்றார்.
இதையும் படிக்க | புனித் ராஜ்குமார்: ரசிகர்கள் கொண்டாடிய அப்பு
பின்னர், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ செல்கிறார். வெள்ளிக்கிழமை இத்தாலி தலைநகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
முன்னதாக, ரோமில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.