நியூயார்க்கில் வரலாறு காணாத கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவுமுதல் அவசரநிலை அமல்படுத்தவுள்ளதாக மேயர் பில் டி பிளாசியோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், மாகாணம் முழுவதும் இன்று இரவுமுதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூயார்க் மேயர் சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில்,
“நியூயார்க்கில் நேற்று இரவுமுதல் வரலாறு காணாத அளவில் வானிலை மோசமாக உள்ளது. மாகாணம் முழுவதும் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று இரவுமுதல் அவசரநிலை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை 5,300 வாடிக்கையாளர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
அடுத்த சில மணிநேரத்தில் மழை நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மாகாணம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகவே, சுரங்கப்பாதைகள் மற்றும் சாலையோரங்களில் யாரும் நிற்க வேண்டாம். அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.”