தலிபான் அமைப்பின் இணை நிறுவனரான முல்லா பராதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என தலிபான் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தலிபான் எதிர்ப்பு அமைப்புகள் போரிட்டுவரும் நிலையில், நிலைகுலைந்த ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தலிபான் அமைப்பை தோற்றுவித்தவர்களில் ஒருவரான முல்லா பராதர், மறைந்த நிறுவன தலைவர் முல்லா உமரின் மகன் முல்லா முகமது யாகூப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளார். மற்றொரு மூத்த தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய்க்கு அரசில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியில் தலிபான்கள்
இதுகுறித்து தலிபான் அலுவலர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "அரசை அமைப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளோம். மூத்த தலைவர்கள் அனைவரும் காபூலில் கூடியுள்ளனர்" என்றார். பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிய பிறகு, ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் தலிபான் எதிர்ப்பு படையினர் தொடர்ந்து போரிட்டுவருகின்றனர். அங்கு, கடும் உயிர் தேசம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் தளபதி அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத் தலைமையில் தலிபான் எதிர்ப்பு படையினருடன் அரசு படைகள் இணைந்து போரிட்டுவருகின்றனர். இதற்கு மத்தியில், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
வறட்சியாலும் போராலும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள அரசுக்கு வெளிநாட்டு முதலீடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.