ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என புதிய அரசை அமைத்த தலிபான்கள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், அங்கு பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகிவருகிறது. தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்த பத்திரிகையாளர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
தலிபான் அரசு அமைக்கப்பட்டு பிறகு, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற இரண்டு புகைப்படங்கள் உறுதி செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளிலிருந்து பகிரப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸை சேர்ந்த வெளிநாட்டு பத்திரிகையாளர் மார்கஸ் யாம், ஆப்கன் செய்தி நிறுவனம் ஆகியோர் இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
அதில், இரண்டு பத்திரிகையாளர்கள் உள்ளாடையுடன் மட்டும் நிற்கவைக்கப்பட்டு பின்புறத்திலிருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள் புகைப்படங்களில் தென்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களான தகி தர்யாபி மற்றும் நெமத்துல்லா நக்தி ஆகியோர் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என எதிலாட்ரோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | எந்தத் தடுப்பூசி சிறந்தது? இன்னும் இருக்கிறதா இந்த சந்தேகம்?
இதுகுறித்து எதிலாட்ரோஸ் செய்தி நிறுவனம், "மேற்கு காபூல் கார்ட்-இ-சார்
பகுதியில் விடியோ எடிட்டர், செய்தியாளர் ஆகியோர் பெண்கள் போராட்டம் குறித்த செய்தியை சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது, தலிபான்கள் அவர்களை கடத்தி சென்று அரையில் அடைத்து தாக்கியுள்ளனர். கொடுமைப்படுத்தியுள்ளனர்" என தெரிவித்தது.