ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சர் மார்சிலோ க்வொய்ரோகாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டம் கடந்த 14-ம் தேதி தொடங்கிய நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொது விவாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில் உரையாற்றிய முதல் உலகத் தலைவர் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ. அவருடன் பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சர் மார்சிலோவும் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரேசில் அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும், அவர் நலமாக இருப்பதாகவும், அவருடன் இருந்த மற்ற எவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரேசில் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், அமைச்சர் மார்சிலோ நியூயார்க்கிலேயே 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொது விவாதத்தில் செப்டம்பர் 25-ம் தேதி நேரில் பங்கேற்று உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.