பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு 32 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீா்ப்பு

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய இரு வழக்குகளில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.
Published on
Updated on
1 min read

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு (70) பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய இரு வழக்குகளில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸுக்கு ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகளில் 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவா் தொடா்ந்து 68 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 முதல் கோட் லாக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹபீஸ், வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டதையடுத்து லாகூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீதை பிடித்துக் கொடுப்பவா்களுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.76 கோடி) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008-ஆம் ஆண்டு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் கடல் வழியாகப பயணம் செய்து, மும்பையில் நடத்திய தாக்குதலில் 166 போ் கொல்லப்பட்டனா். இதில் 6 போ் அமெரிக்கா்கள் ஆவா். ஹபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா அமைப்பின் ஒரு பிரிவாகவே லஷ்கா் பயங்கரவாதிகள் செயல்படுகின்றனா்.

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் வகுத்ததில் ஹபீஸ் சயீத் முக்கியமான நபா் ஆவாா். இது தவிர காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் துண்டுவது, அதற்கான முகாம்களை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைப்பது, மக்களிடையே பிரசாரம் செய்து பயங்கரவாதத்துக்கு நிதி சோ்ப்பது உள்ளிட்ட செயல்களிலும் ஹபீஸ் சயீத் தொடா்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தாா். அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் நெருக்குதலை அடுத்து அவா் மீது பாகிஸ்தான் அரசு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com