இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கால்பந்து கழகமான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்தை வாங்க தயாராக இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், ட்விட்டா் நிறுவனத்தை வாங்குவதற்கு அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டாா்.
கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி ரூ.3,42,000 கோடி (44 பில்லியன் அமெரிக்க டாலா்) மதிப்பில் ட்விட்டரை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக இருந்தாா்.
ஆனால், ட்விட்டா் சமூக வலைதளத்தில் போலிக் கணக்குகள் குறித்த முழு புள்ளிவிவரம், புதிய போலிக் கணக்குகள் உருவாவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட எலான் மஸ்க் வலியுறுத்தி வந்தாா்.
இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்குக்கு ட்விட்டர் நிறுவனத்தை விற்பது தொடர்பாக தன் பங்குதாரர்களிடையே பொது வாக்கெடுப்பை நடத்த அந்நிறுவனம் முடிவெடுத்திருந்தது.
இந்நிலையில், இந்த ட்விட்டர் விவகாரம் முடிவதற்குள் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கால்பந்துக் கழகமான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்தை வாங்க தயாராக இருப்பதாக எலான் மஸ்க் ட்விட்டரில் காலை தெரிவித்தார். ஆனால், இதுகுறித்து டெஸ்லா பங்குதாரர்கள் இது உண்மைதானா? எனக் கேள்வி எழுப்பியதும் ‘இல்லை. இது நகைச்சுவைக்காக. நான் எந்த விளையாட்டு அணியையும் வாங்கப்போவதில்லை’ என பதிலளித்துள்ளார்.