இந்தியா-இத்தாலி இடையே விரைவில் பரஸ்பர சட்ட உதவிகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பொது அல்லது குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்காக தகவல்களைத் திரட்டி, பரிமாற்றம் செய்துகொள்ள ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இடையே பரஸ்பர சட்ட உதவிகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. குற்றம் தொடா்பாக விசாரணை நடத்துவது, சட்ட நடவடிக்கை மேற்கொள்வது, சம்மன் அனுப்புவது, பிடியாணைகளை செயல்படுத்துவது, குற்றத்துக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் பறிமுதல் செய்வது உள்ளிட்டவற்றுக்கு இந்த ஒப்பந்தம் உதவும்.
எல்லைத் தாண்டி திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் குற்றங்கள், எல்லைத் தாண்டிய பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை, கள்ள நோட்டுகள் கடத்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதில் பரஸ்பர சட்ட உதவிகள் போன்ற ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது. இதுபோன்ற ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட 44 நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா-இத்தாலி இடையே பரஸ்பர சட்ட உதவிகள் ஒப்பந்தம் கையொப்பமாவது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அதுதொடா்பாக இருநாடுகளுக்கு இடையே ஏற்கெனவே 2 சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவாா்த்தைகள் சரியான திசையில் செல்வதால், அந்த ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.