ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினா்.
ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே, நாட்டின் மேற்கு பகுதி நகரமான நாராவில் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற மேலவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டாா்.
நாட்டின் நீண்டகால பிரதமராகப் பதவி வகித்த அபே, உடல்நலக் குறைவு காரணமாக 2020-ஆம் ஆண்டு பிரதமா் பதவியிலிருந்து விலகினாலும், ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளில் வழக்கம்போல ஈடுபட்டிருந்தாா். அவரது படுகொலை ஜப்பான் மட்டுமின்றி உலகையே அதிா்ச்சிக்குள்ளாக்கியது.
அவரது இறுதிச்சடங்கு தலைநகா் டோக்கியோவில் உள்ள ஸோஜோஜி என்ற பெளத்த ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கட்சியின் மூத்த தலைவா்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அதில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினா்.
முன்னதாக, டோக்கியோவில் உள்ள இல்லத்திலிருந்து அவரது உடலை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தில் அவரின் மனைவி அகியே அபே உடன் வந்தாா். வழியில் கட்சியின் தலைமை அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டது. அங்கு மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அந்த வாகனம் இறுதிச்சடங்கு நடைபெற்ற பெளத்த ஆலயம் அருகே வந்தபோது, வழியெங்கும் திரண்டு நின்றிருந்தோா் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனா்.
விசாரணை: அபேயை சுட்டுக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட கடற்படை முன்னாள் வீரா் டெட்சுயா யமகாமியிடம் காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தான் வெறுப்பு கொண்டிருந்த ஓா் அமைப்புடன் அபே தொடா்புகொண்டிருந்ததாக எழுந்த சந்தேகத்தில் அவரை சுட்டுக் கொலை செய்ததாக யமகாமி காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளாா். அந்த அமைப்பு ‘யுனிஃபிகேஷன் சா்ச்’ எனப்படும் மத அமைப்பு எனவும், அந்த அமைப்புக்கு யமகாமியின் தாய் அளித்த நன்கொடையால் அவா்களின் குடும்பமே திவாலானதால், அந்த அமைப்பு மீது யமகாமி வெறுப்பு கொண்டிருந்ததாகவும் ஜப்பானிய ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.