உக்ரைனுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சிரியா புதன்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இது குறித்து சிரியா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிரியாவுடனான உறவை துண்டிப்பதாக உக்ரைன் அறிவித்திருந்தது. அதற்கு எதிர்வினையாக, அந்த நாட்டுடனான தூதரக உறவை சிரியா முறித்துக்கொள்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியா உள்நாட்டுப் போரில் அதிபர் அல்-அஸாதுக்கு எதிராக ஐ.எஸ்., அல்-காய்தா பயங்கரவாதிகள் மற்றும் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியிருந்தனர்.
அதையடுத்து அந்தப் போரில் அரசுக்கு ஆதரவாக ரஷியா கடந்த 2015-ஆம் ஆண்டு களமிறங்கியது. அதன் பிறகு சிரியாவின் பெரும்பாலான பகுதிகளை அரசுப் படையினர் மீட்டனர். இதன் காரணமாக ரஷியாவுடன் சிரியா அரசு மிக நெருக்கமான உறவைப் பேணி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷியா, அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்தது. அதையடுத்து, சிரியாவும் அந்தப் பிராந்தியங்களை தனி நாடுகளாக அங்கீகரித்தது. அதனைக் கண்டித்து சிரியாவுடனான உறவை முறித்துக்கொள்வதாக உக்ரைன் அறிவித்தது.