ரஷியா- உக்ரைன் இடையேயானப் போருக்கு நடுவே உக்ரைனில் இளம் பெண் ஒருவரின் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உக்ரைனில் பள்ளிகளில் இசைவிருந்து என்பது முக்கியமான நிகழ்வாகும். பள்ளிக் கல்வியை முடித்து பட்டம் பெறும் நாளில் இந்த நிகழ்வு நடைபெறும். ரஷியா-உக்ரைன் போரில் ஏவுகணைகள் தாக்குதலில் பல கட்டடங்கள் தகர்க்கப்பட்டன. அதில் உக்ரைனின் பல பள்ளிகளும் அடங்கும். இந்த இசைவிருந்து நிகழ்வில் பங்கேற்க அழகான ஆடையில் தனது இடிந்த பள்ளிக் கட்டடத்தின் முன்னாள் நிற்கும் பெண்ணின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தப் புகைப்படத்தினை உக்ரைனின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது, “ இந்தப் பெண் (உறவினர்) இந்த ஆண்டு தனது உயர்நிலைக் கல்வியை முடித்திருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியான நாளை எதிர்நோக்கி காத்திருந்தார். அந்த நாளுக்காக அவரும் அவருடைய நண்பர்களும் இணைந்து இந்த ஆடையை வாங்கினர். ஆனால், ரஷியா உள்ளே வந்தது. அந்த பெண்ணின் பள்ளி தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால், அவர் இந்த நாளுக்காக வாங்கி வைத்திருந்த ஆடையினை அணிந்து தனது இடிந்த பள்ளியின் முன்பு இந்த நாளைக் கொண்டாடுகிறார்.” எனப் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் அவரது இந்தப் பதிவு 42 ஆயிரம் லைக்குகளை கடந்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து அந்தப் புகைப்படம் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் பயனாளர் ஒருவர், போர் சூழலோ அல்லது சாதாரண சூழலோ உக்ரைன் பெண்கள் அழகுதான் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், இதைப் பார்க்கும் பொழுது உக்ரைனில் உள்ளவர்கள் எவ்வளவு மன உறுதியோடு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இவர்களை எப்படி புதின் வெல்லப் போகிறார் எனக் கூறியுள்ளார்.