
கரோனாவால் பாதிக்கப்படாத ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நாள் இரவில் தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலருக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, ஷாங்காயை போலவே சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து மிகவும் மோசமான பரவலால் பெய்ஜிங் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை, ஒமைக்ரானால் 1,300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, உணவகங்கள், பள்ளிகள், சுற்றுலா தலங்கள் ஆகியவை கால வரையின்றி மூடப்பட்டுள்ளது.
பூஜ்ய கரோனா இலக்கை வியூகமாக கொண்டுள்ள சீனா, எல்லை பகுதிகளை மூடிவது, மக்களை நீண்ட நாள்களுக்கு தனிமைப்படுத்துவது, பெரிய அளவில் கரோனா சோதனை மேற்கொள்வது, குறிப்பிட்டு பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதனிடையே, ஊரடங்கு அமலில் உள்ள தென்கிழக்கு பெய்ஜிங்கில் உள்ள நான்சின்யுவான் குடியிருப்பு வளாகத்தில் 13,000 பேரை, தனிமைப்படுத்தப்படும் விடுதிகளுக்கு ஒரே நாள் இரவில் அரசு இடமாற்றம் செய்துள்ளது. அங்கு கடந்த சில நாள்களில், 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் விடுதிகளுக்கு அழைத்து செல்வது போன்ற புகைப்படங்களும் அரசின் அறிக்கையும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சாயோயாங் மாவட்ட நிர்வாகம் கூறுகையில், "அனைத்து நான்சின்யுவான் குடியிருப்பாளர்களும் மே 21 நள்ளிரவு தொடங்கி ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கருதினர்.
எனவே, தயவு செய்து ஒத்துழைக்கவும், இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.